உங்கள் அதிர்ஷ்ட நேரம்

Sunday, December 26, 2010

பங்கு சந்தை குறியீட்டு எண்

சென்செக்ஸ் (SENSEX):

பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது அங்கு என்ன நடக்கிறது என்று வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு
வார்த்தை சென்செக்ஸ்.  Sensitive index என்பதன் சுருக்கமே Sensex, இதனை வைத்துதான் பங்குவணிகத்தினை கணிக்கிறார்கள்.

கி.பி 1875 ஆம் ஆண்டு மும்பையில் 318 வியாபாரிகள் ஆளுக்கு ஒரு ரூபாய் மட்டுமே முதலீட்டு பங்காக போட்டு ஒரு வியாபார அமைப்பாக நிறுவியது தான் இன்றைய மும்பை பங்குவர்த்தக மையம் (BSE).அபோதேல்லாம் எந்தவித குறியீடுகளும் இல்லாமல் அனுபவத்தின் அடிப்படையில்

பங்கு வணிகம் நடந்தது. 1986-ல் தான் முதன் முதலில் Sensex என்ற பங்குவணிக குறியீட்டினை செயல்படுத்தி, சந்தையின் ஏற்ற இறக்கங்களை தெளிவாக உணர செய்தார்கள். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் Sensex புதிதாக வெளியிடப்பட்டது.

இந்த சென்செக்ஸ் எதன் அடிப்படையில் செயல்படுகிறது?

முதலில் முழு சந்தைமதிப்பு முதலீடு (Full Market Capitalization)என்ற அடிப்படையிலும் , பின்னர் 2003 இல் இருந்து கட்டற்ற மாறும் சந்தை மதிப்பு
முதலீடு (Free-float Market Capitalization )என்ற அடிப்படையிலும் கணக்கிடப்படுகிறது.

முழு சந்தைமதிப்பு முதலீடு:

உதாரணமாக ஒரு நிறுவனம் 1000 சமவிகித பங்குகளை தலா 100 ரூபாய் மதிப்பில் வைத்து துவக்கப்படுகிறது என்றால் , அதன் மொத்த மதிப்பு 100x1000= 1,00,000 ஆகும், இந்த மதிப்பின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் மதிப்பை கணக்கிட்டால் அது முழு சந்தை மதிப்பு முதலீடு ஆகும்.

இதில் உள்ள குறைப்பாடு என்னவெனில், அந்நிறுவனத்தின் உண்மை சந்தை மதிப்பு என்ன என்பதை சரியாக கணக்கிட முடியாது, ஏன் என்பதை
அடுத்த மதிப்பீடு பற்றி ப்டிக்கும் போது நேங்களே புரிந்து கொள்வீர்கள்.

கட்டற்ற மாறும் சந்தை முதலீடு:

அதே நிறுவனத்தின் 1000 பங்குகளில் 250 பங்குகளை அதன் முதலாளி தனக்காக வைத்துக்கொண்டு 750 பங்குகளை மட்டுமே மக்கள் வாங்க சந்தையில் விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், மக்களுக்கு கிடைக்கும் பங்குகளின் மதிப்பு என்ன 750x100= 75,000 தான். இப்போது மக்கள் பங்கு பெறும் பங்கு சந்தையில் அந்நிறுவன பங்குகளின் அடிப்படையில் மதிப்பு கணக்கிடும் போது விற்பனைக்கு வராத 250 பங்குகளையும் சேர்த்து மதிப்பிட்டு சொல்வதால் என்ன ஆகும், தேவை இல்லாமல் மதிப்பைக்கூட்டிக்காட்டும், ஆனால் புழக்கத்தில் உள்ள பங்கு மதிப்பு குறைவு, அதன் விற்பனை செயல்ப்பாடுகளே நேரடியாக supply & demand அடிப்படையில் சந்தையின் மதிப்பை வெளிப்படுத்தும்.

எனவே தான் தற்போது எல்லாம் உலக அளவில் அனைத்து பங்கு சந்தைகளும் கட்டற்ற மாறும் சந்தை முதலீடு அடிப்படையில் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.

நம் பங்கு சந்தை குறியீட்டு எண் எப்படி கணக்கிடப்படுகிறது:

இக்குறியீட்டினை ஏதோ ஒரு ஆண்டினை அடிப்படை ஆண்டாக வைத்து துவக்க வேண்டும், நமக்கு 1979 தான் பங்கு சந்தை குறியீட்டு அடிப்படை ஆண்டு. ஒவ்வொரு ஆண்டும் , புதிதாக எத்தனை நிறுவனங்கள் பங்கு வெளியிட்டாலும் அதனை முதலில் அந்த அடிப்படை பங்குகளின் செயல் பாட்டுடன் ஒப்பிட்டே மொத்த சந்தையினை மதிப்பிடுவர்கள். பங்குகளின் மொத்த மதிப்பினை, துவக்க பங்கு மதிப்புக்கும் , துவக்க பங்கு குறியீட்டுக்கும் உள்ள விகிதத்தால் பெருக்கி கிடைக்கும் எண்ணுக்கு தான் Sensex என்று பெயர்.

1979 -ல் 30 நிறுவனப்பங்குகள் எடுத்துக்கொண்டார்கள், அதன் மொத்தமதிப்பாக 60,000 ரூபாய் என்றும், அதன் ஆரம்ப குறியீடாக 100 என்றும் வைத்துக்கொண்டார்கள்.

இப்பொழுது sensex கணக்கிட அந்த 30 பங்குகளின் சந்தை மதிப்பை, சந்தையில் கிடைக்கும் விற்பனைக்கு கிடைக்கும் பங்குகளின் எண்ணிக்கை வைத்து கணக்கிடுவார்கள், அப்படி கிடைக்கும் மதிப்பினை 100/60,000 என்ற எண்ணால் பெருக்குவார்கள் , (இந்த விகிதத்திற்கு index divisor என்று பெயர்) அப்படி பெருக்கி கிடைக்கும் எண்ணே அப்போதைய பங்கு சந்தை குறியீட்டு எண் sensex.

30 அடிப்படை நிறுவனங்களை பெரிய , நடுத்தர , மிக நீண்டக்காலமாக இருக்கிற, நம்பிக்கையான, அதிகம் வியாபாரம் ஆகும் பங்குகள் என்று பல அளவுகோள்களின் அடிப்படையில் அவ்வப்போது தேர்வு செய்வார்கள். அந்த 30 நிறுவனங்களின் செயல்பாடு, வர்த்தகம், அதன் மதிப்பே சென்செக்ஸ் குறியீடு ஆகும்.

இதன் மூலம் நாம் நமது பங்கு சந்தையின் ஒவ்வொரு நாளின் மதிப்பையும் அறிந்து கொள்ளமுடியும். சந்தையின் மதிப்பு கூடியுள்ளதா குறைந்துள்ளதா நாம் சந்தையில் நுழைய ஏற்ற நேரமா என்பது போன்ற விசயங்களை தெரிந்து கொள்ளலாம்.

Saturday, December 25, 2010

பங்கு சந்தையில் வர்த்தகம்.

பங்குச் சந்தையில் இரு முறைகளில் வர்த்தகம் நடைபெறுகிறது.

1. தினசரி வர்த்தகம் (Day trading or  Intra day  )

2. நீண்ட கால முதலீடு ( Investment  or  Long term )

நாம் முதலில் தினசரி வர்த்தகத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

தினசரி வர்த்தகம் ( day trading )  என்பது பங்குகளை வாங்குவதும் விற்பதும் ஒரே நாளுக்குள் செய்து முடிக்கப்பட வேண்டும். அன்றைய தினம் மார்க்கெட் முடியும் பொழுது நமது கையில் எந்தப் பங்கும் இருக்கக்கூடாது.    மார்க்கெட் முடியும் நேரத்திற்குள் கையிலிருக்கும் பங்குகளை விற்றுவிட வேண்டும் . ஆங்கிலத்தில் square off  செய்து விடுவது என்று சொல்வார்கள்.

தினசரி வர்த்தகத்தில் இரு வகை உண்டு

லாங் ட்ரேடிங் ( Long Trading  )
ஷார்ட் ட்ரேடிங் ( Short Selling  )

லாங் ட்ரேடிங் ( Long Trading  )  என்பது பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி பங்கின் விலை அதிகமானவுடன் விற்பது. இவ்வகை ட்ரேடிங் பொதுவாக மார்க்கெட் புள்ளிகள்(சென்செக்ஸ்) உயர்ந்து கொண்டிருக்கும் பொழுது, குறிப்பிட்ட பங்கின் விலையும் உயரும் என்று நமக்கு உறுதியாக தெரியும்பொழுது செய்யலாம்.

ஷார்ட் ட்ரேடிங் ( Short Selling  )  என்பது பங்குகளை உயர்ந்த விலையில் விற்றுவிட்டு- நம்மிடம் பங்களே இல்லாத போதும்- பங்கின் விலை குறைந்தவுடன் வாங்கிவிடுவது . இவ்வகை ட்ரேடிங் பொதுவாக மார்க்கெட் புள்ளிகள் சரிந்து கொண்டிருக்கும் பொழுது குறிப்பிட்ட பங்கின் விலையும் சரியும் என்று நமக்கு உறுதியாகதெரியும் பொழுதும் செய்யலாம்.

லாங் ட்ரடிங் பண்ணும் பொழுது நமக்கு நஷ்டம் ஏற்படும் வகையில் பங்குகளின் விலை இருந்தால், அதாவது நாம் உயரும் என்று நினைத்து வங்கிய பங்கின் விலை குறைந்து விட்டால் நாம் அப்பங்குகளை அடுத்த நாட்களுக்கு நமது கணக்கில் தேவையான பணம் இருந்தால் டெலிவரி எடுத்துக்கொள்ளலாம்.

இப்பொழுது இது நீண்ட கால முதலீடு ஆகிவிடும். இது இரு நாட்களில் இருந்து சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் வரை கூட இருக்கலாம்.

இந்த பங்கை எப்பொழுது விற்பது என்பதை பங்கின் விலை ஏற்றம், நமது பணத்தேவை அல்லது நாம் முடிவுசெய்துள்ள லாபத்தை பங்கு அடைந்து
விட்டது என்பன போன்ற பல காரணங்களை ஆராய்ந்து நாம் முடிவு செய்து கொள்ளலாம்.

ஆனால் டே ட்ரேடிங்-ல் வாங்கிய பங்குகளை முதலீட்டுப் பங்குகளாக மாற்றாமல் இருக்கவேண்டும் என்பது ஒரு பொதுவான விதி.

டே ட்ரேடிங் மிகவும் அபாயமானது புதிதாக சந்தையில் நுழைபவர்களுக்கு ஏற்றதல்ல.  முதலீடு அனைத்தும் கரைந்து போக வாய்ப்புள்ளது. ஆனாலும் எங்கு அபாயம் அதிகமோ அங்குதான் லாபமும் அதிகம்.

டே ட்ரேடிங் இல் கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள்:

மார்க்கெட்டின் போக்கை கவனித்து மார்க்கெட்டின் போக்கிலேயே( Market trend ) செயல்பட வேண்டும்.

வாங்கும் விலை ( Entry price ) விற்கும் விலை ( Exit price )  மிகவும் முக்கியம்.

பங்கு மிகக் குறுகிய காலமே நம் கையிலிருக்க வேண்டும்.

வாங்கப்போகும் பங்கை உன்னிப்பாக கவனித்து வரவேண்டும்.

அதிக எண்ணிக்கையில் விற்கும் ( volume ) பங்குகளே டே ட்ரேடிங்-ற்கு ஏற்றது.  ஏனென்றல் விற்க்கும்பொழுது விரைவாக விற்றுவிடமுடியும்.
 
நாம் முடிவு செய்த விலைக்கு அருகில் பங்கின் விலை வந்தவுடன் விரைவாக விற்று லாபத்தை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

மிகவும்முக்கியம் லாபத்திலிருந்து நஷ்டத்திற்கு பங்கின் விலை சென்று விடக் கூடாது.

ஒரே பங்கில் (Single trade )  அதிக லாபம் எதிர்பார்க்கக் கூடாது.

ஸ்டாப் லாஸ் ( Stop loss ) டே ட்ரேடிங்-ன் உயிர். மிக மிக அவசியம்.

ஒரே பங்கில் ( Single trade )  மொத்த முதலீட்டையும் செய்ய கூடாது.

நஷ்டம் வரும் பொழுது பதட்ட பட வேண்டியதில்லை.

மார்க்கெட்டில் நிறைய அனுபவமுள்ளவர்கள்,  அவர்கள் வாங்கும் எல்லா பங்குகளிலும் லாபம் சம்பாதிப்பதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அடுத்து பங்கு சந்தையில் நீண்டகால முதலீடு ( Long Term ) பற்றி தெரிந்து கொள்வொம்.

பங்கு சந்தையில் பெரும் லாபம் ஈட்டியவர்கள் எல்லாம் தங்கள் பணத்தை பங்கு சந்தையில் நீண்ட கால முதலீடு செய்தே அதைச்சாதித்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.    

இந்த முறையில் நாம் வாங்கும் பங்குகளை நான்கு நாட்கள் முதல் பல வருடங்கள்வரை நாம் வைத்துக்கொள்ளமுடியும். இந்த முதலீட்டை நாம் பல
காரணங்களுக்காக நீட்டிக்கொண்டே போகலாம். இதனால் நமது பங்குகளின் மதிப்பு இரண்டு முதல் மூன்று மடங்கு வரை கூட உயர வாய்ப்புள்ளது.

நன்கு கவனிக்கவும் வாய்ப்புத்தான் உள்ளது. ஏனென்றால்பங்குச் சந்தையில் நமக்கு வங்கியை விட அதிக லாபம் கிடைக்கும் போலிருக்கிறதே என்று
நாம் நம்மிடம் உள்ள பணத்தை எல்லாம் இதில் முதலீடு செய்யக்கூடாது. சில பங்குகள் நமது முதலீட்டை இரு மடங்கு மும்மடங்கு ஆக்கும் ஆனால்
சில பங்குகள் நமது முதலீட்டையும் கரைத்துவிட்டு சந்தையை விட்டே ஓடி விடக் கூடிய அபாயமும் இருக்கிறது. இல்லாவிட்டால் பங்குகளில் முதலீடு செய்த அனைவருமே இன்று கோடிஸ்வரர்களாக வலம் வருவார்கள்.  சில நேரங்களில் நாம் முதலீடு செய்யும் பங்குகள் நமக்கு லாபமும் கொடுக்கலாம் சில சமயம் நஷ்டமும் கொடுக்கலாம்.

அதனால் பங்கு சந்தையில் தொடர்ந்து லாபம் ஈட்ட நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்:

முதலில் நாம் தினசரி வர்த்தகம் பண்ணப்போகிறோமா அல்லது முதலீடு பண்ணப்போகிறோமா என்று தெளிவாக முடிவு செய்வது அவசியம்.
நாம் முதலீடு செய்ய முடிவு செய்திருக்கும் தொகையில் பாதியை மட்டுமே முதலில் முதலீடு செய்ய வேண்டும். ஏனென்றால் சந்தை எப்பொழுதுமே
ஏறுமுகத்திலேயே இருக்காது. அவ்வப்போது இறங்கி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்.  இதை கரெக்சன் ( Correction ) என்பார்கள்.  

நாம் வாங்கிய பங்கின் விலை சரிந்தால், இந்த பங்கு மறுபடியும் ஏறும் என்ற நம்பிக்கை நமக்கு இருந்தால் நாம் மறுபடியும் சிறிது பங்குகளை அன்றைய குறைந்த விலையில் வாங்கிக் கொள்ள்லாம் இதை சந்தையின் வார்த்தைகளில் ஆவெரேஜ் (Average) செய்வது என்பார்கள்.

நமது முதலீடு அனைத்தையும் ஒரே பங்கில் முதலீடு செய்யாமல் பல பங்குகளில் சிறு முதலீடுகளாக வைத்திருப்பது நல்லது. அதற்காக 50  நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தால் நம்மால் அனைத்தையும் கவனிக்க முடியாது.

நமது முதலீடு அனைத்தையும் ஒரே துறையில்(SECTOR) முதலீடு செய்யாமல் வேறு வேறு துறைகளில் முதலீடு செய்ய வேண்டும்.

ஒரு துறையை எடுத்துக்கொண்டால் அந்தத் துறையில் வளர்ந்துவரும் நிறுவனங்களை உன்னிப்பாக கவனித்து முதலீடு செய்தால் நமது முதலீடும் வேகமாக வளரும்.

நாம் முதலீடு செய்ய நினைக்கும் பங்கின் விலை இப்பொழுது நாம் வாங்க நினைக்கும் விலையில் இல்லை என்றாலும் நாம் தொடர்ந்து அப்பங்கின் போக்கை தினமும் கவனித்து வந்தால் சந்தையில் விலைஇறக்கம் ஏற்படும்பொழுதுபங்கின் விலையும் குறையும் போதும் அதை வாங்கமுடியும்.

Friday, December 24, 2010

BSE AND NSE

நமது நாட்டின் மிக முக்கிய இரு பங்குச் சந்தைகள் பீ எஸ் ஈ ( BSE ) மற்றும் என் எஸ் ஈ ( NSE )


இதில் பீ எஸ் ஈ ( BSE ) மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்செஞ்ச. 
1875 ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆசியாவின் மிகப்பழமையானநிறுவனம் ஆகும்.
என் எஸ் ஈ ( NSE )  டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்செஞ்ச.


பங்குகள் ( share )


ஒரு நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்யும் நபருக்கு அவர் கொடுக்கும் பணத்தின் மதிப்பிற்க்குரிய அளவில் தன் நிறுவனத்தின் 


உரிமையை பிரித்துக் கொடுப்பது பங்கு ஆகும் என முன்பே பார்த்தோம்.


ஆரம்பத்தில் பங்குகளை பேப்பர் வடிவத்தில் பரிமாறிக் கொள்ளும் பழக்கம் இருந்தது. நாளடைவில் அதில் இருந்த நிர்வாக சிக்கல்கள் மற்றும் கணிணி 
துறையின் அசுர வளர்ச்சி இவை இரண்டும் சேர்ந்து பங்குகள் பரிமாறிக்கொள்ளும் வழக்கத்தில் ஒரு பெரிய மறுதலை ஏற்படுத்தியது.


தற்பொழுது நிறுவனத்தின் பங்குகள் கணணி மூலமே இணையத்தில் பரிமாறிக்கொள்ள படுகிறது. உங்களிடமுள்ள பங்குகள் உங்களுடைய டீமாட் 
அக்கௌண்டில் ( demate account )மட்டுமே இருப்பு வைத்து கொள்ளப்படும்.


டீமாட் அக்கௌண்ட் ( Deemat Account )


பணத்தை சேமிக்க ஒரு பேங்க் அக்கௌண்ட் வைத்துள்ளோமே அதுபோல் பங்குகளை சேமிக்க டீமாட் அக்கௌண்ட் ( Deemat Account ).  டீமாட் 
என்பது Dematerialized என்பதன் சுருக்கம். நீங்கள் வாங்கும் அல்லது விற்கும் பங்குகள் எலக்ட்ரானிக் பார்மில் ( Electronic Form ) இந்த அக்கௌண்ட் 
-ல்தான் கணக்கு வைத்துக்கொள்ளப்படும்.


ஒரு உதாரணத்திற்கு நாம் ரிலையன்ஸ் பங்குகள் 100 , ஹீரோ ஹோண்டாவின் பங்குகள் 75 மற்றும் மாருதியின் பங்குகள் 50 வைத்து இருக்கிறோம் 
என்றால் இந்த விபரம் இந்த டீமாட் அக்கௌண்டில் தான் இருக்கும். 


தற்பொழுது பங்குச் சந்தையில் வர்த்தகம் பண்ண இந்த டீமாட் அக்கௌண்ட் அவசியம் .


இந்த டீமாட் அக்கௌனண்ட் ஓபன் பண்ணுவது மிகவும் சுலபம், தேவையான சான்றுகளைக் கொடுத்தால் ப்ரோக்கர்களே ஓபன் செய்து கொடுத்து விடுவார்கள்.


தேவையான சான்றுகள்: பான் கார்டு, முகவரி சான்று, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோ போன்றவைதான்


சென்செக்ஸ் ( Sensex )


சென்செக்ஸ் பங்குச் சந்தையின் இன்றைய நிலவரத்தை குறிக்கும் ஒரு குறிட்டு எண் ஆகும். மும்பை பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள  


குறிப்பிடத்தக்க 30 நிறுவனங்களின் அன்றைய சந்தை செயல்பாட்டை வைத்து இதை கணக்கிடுகிறார்கள.  இந்நிறுவனங்களை 12  தொழில் துறைகளில் 


இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள்.


இந்நிறுவனங்களின் மதிப்பு இன்று உயர்ந்தால் அதாவது இந்நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு விற்கப்பட்டால் சென்செக்ஸ் மதிப்பு உயரும் 


அல்லது இந்நிறுவனங்களின் மதிப்பு இன்று குறைந்தால் சென்செக்ஸ் மதிப்பு குறையும்.


நிப்டி ( nifty) 


இதே போல் என்.எஸ்.ஈ ( NSE )  குறியீட்டு எண் நிப்டி ( nifty). இது 50 நிறுவனங்களை வைத்து கணக்கிடப்படுகிறது.


ஒரு நிறுவனம் சென்செக்ஸ் அல்லது நிப்டி-யில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது அல்லது வெளியேற்றபடுகிறது என்பது பொதுவாக பங்குச் சந்தையில் 


ஒரு முக்கிய நிகழ்வாகும். இதைக் கணக்கில் கொண்டு பங்குகளின் மதிப்பு ஏறவோ இறங்கவோ செய்யும்.


ஸ்டாப் லாஸ் (Stop Loss )

ஒரு பங்கை நாம் வாங்கும் முன் தெரிந்து கொள்ளவேண்டியது.


ஸ்டாப் லாஸ் என்றால் நாம் வாங்கிய பங்கின் விலை சரிந்தால் நாம் எந்த விலையில் அந்த பங்கிலிருந்து வெளியேற வேண்டும் என்று முடிவு செய்து கொள்வது.


அதாவது நம்மால் எவ்வளவு நஷ்டம் தாங்க முடியும் அல்லது அப்பங்கின் சப்போர்ட் லெவல் ( support level ) என்ன என்பதை அறிந்துகொண்டு நாம் ஒரு விலையை முடிவு செய்து கொள்ள வேண்டும்.  அந்த விலைக்கும் கீழே பங்கின் விலை சென்றால் கட்டாயம் நாம் அந்தப்பங்கை விட்டு வெளியேறிவிடவேண்டும். 


முக்கியமாக ஒரு பங்கை வாங்கியவுடன் நாம் ஸ்டாப் லாஸ் முடிவுசெய்து விடவேண்டும். நாம் ஆன் லைனில் டிரேடிங் செய்கிறோம் என்றால் 
உடனே நமது ஆர்டரில் ஸ்டாப் லாஸ் ஆர்டர் போட்டுவிட வேண்டும்.  ஆப் லைனில் டிரேடிங் செய்கிறோம் என்றால் உடனே நமது ப்ரோக்கரிடம் ஸ்டாப் லாஸ் விலை என்ன என்பதைச் சொல்லி விட வேண்டும்.


அதைவிட முக்கியம் மார்க்கெட் சரிந்து கொண்டிருக்கிறது அல்லது பங்கின் விலை சரிந்து கொண்டிருக்கிறது என்றால் உடனடியாக நாம் குறிப்பிட்ட ஸ்டாப் லாஸ் விலையில் நமது பங்கு விற்றுவிட்டதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். 


டிரேடிங் அக்கௌன்ட்( Trading  Account )


இது நமக்கும் நமது ஷேர் ப்ரோக்கர்( Share Brokker )க்கும் இடையில் உள்ள அக்கௌண்ட்.  இந்த அக்கௌண்ட்-ல்தான் நம்முடைய முதலீடு பணமாக இருக்கும். இந்த அக்கௌண்டில் உள்ள மதிப்பிற்கேற்ப நாம் பங்குகளை வாங்கிக்கொள்ளலாம்.


ஷேர் ப்ரோக்கர் ( Share Brokker )


யார் வேண்டுமானாலும் பங்குசந்தையில் சென்று பங்குகளை வாங்கி விற்க முடியாது. அதெற்கென பங்கு சந்தையில் பதிவு செய்துள்ள சில நிறுவனங்கள்
உள்ளன. அவர்களைத்தான் நாம் ஷேர் ப்ரோக்கிங் கம்பெனிகள் என்போம். 


அவர்கள் நமக்காக சந்தையில் நாம் விரும்பும் பங்குகளை வாங்கியோ அல்லது விற்றோ தருவார்கள். அதற்காக நாம் அவர்களுக்கு கமிசன் தர 
வேண்டியிருக்கும். இதை பொதுவாக Brokkerage  என்போம். பங்கு வர்த்தகத்தில் லாபம் சம்பாதிக்க இந்த ப்ரோக்கர் கமிசனை புரிந்து கொள்வது மிக அவசியம். 

ஷேர் ப்ரோக்கிங் கம்பெனிகளில்
HDFC
SBICAB SECURITIES
ICICI DIRECT
India Infoline
Sharekahan
India Bulls Securities
Religare Securities
போன்றவை குறிப்பிடத்தகுந்தவை.

ஷேர் ப்ரோக்கர் விசயத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1.ஒரு நல்ல ப்ரோகரை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.

2.ப்ரோக்கர் கமிசன் நாமே கணக்கிட்டு பழகிக்கொள்வது மிக நல்லது. அப்பொழுதுதான் நமது ஒவ்வொரு வர்த்தகத்திலும் ( Trade ) நமக்கு எவ்வளவு லாபம் என்று
கணக்கிட்டுக் கொள்ளமுடியும்.
3.டிரேடிங் அக்கௌண்ட்டை தினமும், டீமாட் அக்கௌண்ட்டை வாரம் ஒரு முறையும் சரி பார்த்துக்கொள்வது நல்லது.
மொபைல் போனில் டீமாட் அக்கௌண்ட்-ன் 
பங்கு பரிவர்த்தனைகள் கிடைக்குமாறு செய்து கொண்டால் மிகவும் நல்லது
4.டிரேடிங் அக்கௌண்ட்-ல் நம்முடைய முகவரி சரியானதாக இருக்க வேண்டும் இல்லாவிடில் நமது காசோலைகள், நாம் பங்கு வாங்கிய கம்பெனிகளில் இருந்து வரும் தகவல்கள் வேறு முகவரிக்கு சென்றுவிட வாய்ப்புள்ளது.
நாம் முகவரி மாறினால் உடனடியாக ப்ரோக்கரிடம் தெரிவித்து விட வேண்டும்.

BSE யின் முகவரி      NSE யின் முகவரி                            



மேலே கண்ட முகவரியில் நாம் எந்த சந்தையில் பங்கு வாங்கினோமோ அந்த முகவரிக்கு சென்று அன்றைய தினத்தில் நாம் வாங்கிய பங்குகள் என்ன விலையில் முடிந்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் கம்பெனிகள் தினமும் தரும் தகவல்களும் ஒவ்வொரு பங்குகளும் எவ்வளவு விற்பனையாகி யுள்ளது போன்ற பல விவரங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.

Sunday, December 5, 2010

பங்கு சந்தை = பரமபத விளையாட்டு

பங்கு சந்தை சரியும் போதெல்லாம் hedge fund, FII, odi ,p-note , fdi , செய்த விளையாட்டு என்பார்கள் அவற்றைப்பற்றியும் அறிந்து கொள்வோம் ,

HEDGE FUND:

 கையில அதிகமா காசு இருக்கும். அதை குறுகிய காலத்தில் ,ரொம்ப ரிஸ்க் எடுக்காம ஒரு மாற்று வகையில் முதலீடு செய்யனும் என்று நினைப்பவர்கள் வைத்திருக்கும் பணம், இது பெரும்பாலும் வெளிநாட்டுக்காரங்க காசு தான்.எங்கே எல்லாம் காசு போட்டா குட்டிப்போடுமோ அங்கே எல்லாம் காச இறக்கி ஆடுவாங்க.

அமெரிக்காவை சேர்ந்த உலகின் பெரிய ஹெட்ஜ் பண்ட் நிறுவனம் ரெனைசன்ஸ் டெக்னால்ஜிஸ் இந்தியாவில் தற்போது தங்கள் கிளையை நிறுவியுள்ளார்கள் என்றால் இந்திய பங்கு சந்தையின் மதிப்பை உணர்ந்துக்கொள்ளலாம்.

FII-Foreign Institutional Investor

ரிசர்வ் வங்கி அனுமதி பெற்ற அயல்நாட்டு நிதி நிறுவனங்கள், நிதிஆலோசனை குழுமங்கள் , பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்தியாவில் இப்படி முதலீடு செய்வது தான் fii எனப்படும். இந்தியவம்சாவளியினர் அல்லாமால் மற்றவர்கள் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய இது தான் வழி. ஹெட்ஜ் பண்ட் என்ற பணம் கையில் இருந்தாலும் யாரும் நேரடியாக முதலீடு செய்ய முடியாது . அந்த பணத்தை இப்படி fii வழியாகத்தான் அனுப்புவார்கள்.

P-note: participatory note, என்ற ஒரு வகையின் மூலம் தான் fii தாங்கள் பெற்ற ஹெட்ஜ் பண்ட் நிதியை இந்திய பங்கு சந்தையில் இறக்குவார்கள். fii நேரடியாகவும் நிதி முதலீடு செய்யும். ஆனால் அதற்கான ரிசவ் பேங்க் நடைமுறைகள், வரி விகிதம் என ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கு, ஆனால் இந்த p-note முறையில் அவை எளிமையாக இருக்கிறது. இந்த வகையில் பணம் முதலீடு செய்பவர் யார் , எந்த நாடு என்று வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருக்கலாம்.

ODI: offshore derivatives investors:

இது ஒரு தொகுப்பாக உள்ளது இதில் தான் p-note வகையும் அடக்கம், இதில் மேலும்,
equity-linked notes,
capped return note,
participating return note,
investment note and similar instruments

ஆகியவையும் இருக்கிறது.

FDI: foreigne direct investment :

அரசின் அனுமதியுடன் ஒரு இந்திய நிறுவனத்தில் முதலீடு செய்வது. இந்திய நிறுவனத்தின் பங்கு தாரர் ஆகிவிடுவார்கள்.

பங்கு சந்தை சரிவுக்கு p-note வழியாக வரும் ஹெட்ஜ் பண்ட்-கள் என கருதக்காரணம் என்ன? ஏன் இந்த ffi கண்டு பங்கு சந்தைப்பயப்படுகிறது.
இதற்கு எல்லாம் யார் காரணம்?

இதுக்கு ஆரம்ப காரணம் நம்ம அரசாங்கம் தான், ஏன்னா 1992 க்கு முன்ன வரைக்கும் இந்திய பங்கு சந்தையில் அந்நியர்கள் முதலீடு செய்ய முடியாது, அப்போ இருந்த நரசிம்ம ராவ் அரசாங்கம் பொருளாதார சீர் திருத்தம் செய்ய புகுந்த போது இப்படி fii, odi, p-note ஆகிய வழிகளை உருவாக்கி வெளியில இருந்து முதலீடு கொண்டு வர செய்தது.

இதில் மேலும் இடியாப்பச் சிக்கலை உருவாக்கிறா மாதிரி , இதற்கு முன்னர் fii ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் 24 சத பங்கு களுக்கு மேல் வாங்க கூடாதுனு இருந்த கட்டுப்பாட்டையும் தளர்த்தி, 49 சத பங்குகள் வாங்கலாம்னு 2004 இல் உத்தரவுப்போட்டாங்க, இதிலும் அதையும் தாண்டி கூட பங்குகளை வாங்கலாம் , அதற்கு ரிசர்வ் பேங்க்கிட்டே தனி அனுமதி வாங்கனும், கொடுத்தால் வாங்கிக்கொள்ளலாம்.

1992 ல எல்லாம் சென்செக்ஸ் ஒரு 2500- 3000க்குள்ள தான் இருக்கும் பெருசா யாருக்கும் நட்டம் வராது. இந்த fii உள்ள விட்டப்பிறகு தான் காளை ஓட்டம் அதிகம் ஆச்சு, அப்போதைய fii முதலீடு 827 மில்லியன் டாலர்கள் தான்,  2007 இல் ஒரே ஆண்டில் வந்த fii முதலீடு மட்டும் 17.2 பில்லியன் டாலர்கள். 2000 ஆண்டுக்கு பிறகு வந்த ஆண்டுகள் பங்கு சந்தையில் fii களின் பொற்காலம்னே சொல்லலாம், அவங்களால தான் பங்கு சந்தை விண்ணைத்தொட்டது , அப்போ அப்போ மண்ணையும் கவ்வியது!

ஒரு காலத்தில் 100க்கும் குறைவான fii நிறுவனங்களுக்கு மட்டுமே செபி அனுமதி கொடுத்திருந்தது, இப்போ 2007 நிலவரப்படி 1219 fii நிறுவனங்கள் இயங்குது. இவர்கள் கொடுத்திருக்கும் p-note களின் எண்ணிக்கை 34 ,மட்டுமே ஆனால் 30.5 சத இந்திய பங்கு சந்தை மதிப்பை இந்த p-note வகையில் முதலீடு செய்தவர்கள் கையில் இருக்கு.

இப்படி முதலீடு செய்தவர்கள் எல்லாம் குறுகியகால நோக்கில் செயல்படுவர்கள் , எப்போது வேண்டுமானாலும் விற்பார்கள் மீண்டும் வாங்குவார்கள், இதனால் அவ்வப்போது பங்கு சரிவு ஏற்படும், ஏன் எனில் இவர்கள் தான் மொத்த எண்ணிக்கையில் பங்குகளை கை மாற்றுபவர்கள், எனவே இவர்கள் செயலை பொறுத்தே பங்கு சந்தை ஊசலாட்டம் இருக்கும், மற்ற உள்நாட்டு பொது மக்கள் வாங்கும் பங்குகள் சில்லரை வர்த்தகம்(retail investors) வகையில் வரும், அவர்களால் பங்கு சந்தையின் திசையினை நிர்ணயிக்க முடியாது, ஆனால் உண்மையில் அவர்கள் தான் பங்கு சந்தையின் முதுகெலும்பு .

இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் (dii)பரஸ்பர நிதி திரட்டி செயல்படுவர்கள் , ஹெட்ஜ் பண்ட்கள் கொண்டு அல்ல, நீண்டக்கால நோக்கில் முதலீடு செய்வார்கள், அடிக்கடி வாங்கி விற்றலில் ஈடுபடுவதில்லை.

அதே சமயம் fii க்கள் அப்படி அல்ல, ஆக்டிவாக விற்பனையில் இறங்கி செயல்படுவார்கள், அதனால் தான் தினசரி 60 சத பங்குகள் இந்த பக்கமும் அந்த பக்கமும் கைமாறுவதில் பங்கு பெறுகிறார்கள். இது தான் பங்கு சந்தையின் ஓட்டத்திற்கு பெரிதும் காரணம்.

அதே போல fii க்கள் எப்போது வேண்டுமானால் மொத்தமாக பங்குகளை ஒரே நாளில் விற்பார்கள்.

மேலும் fii க்கள் bse - 30 எனப்படும் அடிப்படை பங்குகளில்லோ nifty-50 எனப்படும் பங்குகளிலோ உள்ள முதன்மை பங்குகளில் அதாவது லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்யும் அளவு குறைவாக இருக்கும், அதிலும் முக்கியமாக பங்கு சந்தை சரிவதற்கு முன்னர் அவர்கள் மெதுவாக இந்த முக்கிய பங்குகளில் இருந்து தங்கள் பணத்தை திரும்ப எடுப்பதைக்காணலாம்.அவர்கள் பெரும்பாலும் மிட் கேப் எனப்படும் நடுத்தர பங்குகளில் அதிகம் முதலீடு செய்திருப்பார்கள்.

மேலும் பங்கு சந்தை வளர்ச்சி என்பது அசுரத்தனமானது , இது ஒரு ஆரோக்கியமான நிலையே இல்லை எனலாம், நமது தேசிய உற்பத்தி வளர்ச்சி gdp 8 சதம் , ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நமது பங்கு சந்தை வளர்ச்சி 800 சதம் அதிகரித்துள்ளது, இது ஒரு வீக்கம் போன்றது தானே!

கடந்த காலங்களில் ஏற்பட்ட பங்கு சரிவுகளின் போது ஏற்பட்ட சென்செக்ஸ் மாற்றங்கள்
Top 5 market falls

Date                    Close    Change   % Chg
________________________________               
January 21, 08 17605.35 -1408.00 -7.41
March 3, 08         16677.88 -901.00 -5.12
January 22, 08 16729.94 -875.00 -4.97
February 11, 08 16630.91 -834.00 -4.78
May 18, 06           11391.43 -826.00 -6.76
________________________________

ஜனவரி மாதம் ஏற்பட்ட சரிவில் மட்டும் 2,78,593 கோடி ரூபாய், சந்தை மதிப்பில் இந்திய முதலீட்டாளர்கள் இழந்துள்ளார்கள்.

2006 இல் 44.17 சதம் மிட் கேப்பில் fii முதலீடு செய்தார்கள் அதன் விளைவாக bse sensex 38.84 சதம் உயர்ந்து , குறியீட்டு எண் 12,454.42 இல் இருந்து 17,281.10 ஆக உயர்ந்தது. bse-30, nifty-50 இல் லார்ஜ் கேப், மிட் கேப் என எல்லாமே இருக்கும், அதில் இருக்கும் மிட் கேப் பங்குகள் இவை.

ஏற்கனவே சொன்னது போல லார்ஜ் கேப் புளு சிப் பங்குகளில் குறைவாக முதலீடு செய்யக்காரணம் அவற்றின் விலை எப்போதுமே அதிகமா இருப்பது, எனவே குறைந்த "volume of shares" தான் வாங்க முடியும். மேலும் வளர்ச்சி விகிதம் வேகமாகவும், அதிகமாகவும் இருக்காது. அதே சமயத்தில் மிட் கேப் களில் அதிக "volume of shares" வாங்கலாம், வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும்.

ஆனால் fii விற்க ஆரம்பிக்கும் போது பெரிய புளுசிப் ஷேர்களையும் விற்பார்கள், supply and demand தான் பங்கு வர்த்தகத்தை நிர்ணயிக்கிறது , எனவே பெரிய அளவில் திடீர் என பங்குகள் சந்தையில் விற்கப்பட்டு , வாங்க கிடைத்தால் demand குறைவது இயல்பு தானே. எனவே ஒட்டு மொத்தமா பங்கு வணிகத்தின் நிலைத்தன்மை பாதிக்கும். இதன் விளைவாக ஒரு பயத்தில் சில்லறை பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் பொதுமக்களும் பங்குகளை விற்கப்பார்ப்பார்கள், எனவே சர்வ நாசம் ஏற்படுகிறது.இதுவே சரிவின் மூல காரணம்.

அதே போன்று fii முதலீடு அதிகம் இருக்கும் நிறுவனத்தின் பங்கு உடனே மேலே போகும், fii எப்படி தங்கள் முதலீட்டினை எப்படி பிரித்து முதலீடு செய்கிறார்கள்(pattern of investment or portfolio) என்பதைப்பார்த்தாலே எந்த பங்கு மேலே போகும் என்று சொல்ல முடியும்.

பங்கு சந்தை தரகர்கள் , ஆலோசகர்களுக்கு முன் கூட்டியே fii முதலீடு பாயப்போகும் திசை தெரிவதால் தான் அவர்கள் பாதுகாப்பாக இயங்குகிறார்கள், இதன் அடிப்படையில் தான் ஷேர் டிப்ஸ் தருவதும்.இணையத்தின் மூலம் பல பங்கு வர்த்தக தளங்களிலும் ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள fii மூலதனத்தின் அளவைப்பார்க்க முடியும்.ஆனால் இவை கடந்த கால நிலவரத்தை காட்டுவது, நாளை, இன்று எதை fii கள் வாங்க போகின்றது என்பதை யூகம் தான் செய்ய வேண்டும்.

அந்நிய முதலீடு என்று இல்லை உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களின(DII) செயல்பாடும் தரகர்களுக்கு தெரியும், ஏன் எனில் அவர்கள் தானே யார் , யார் பங்கு வாங்க "quote "கேட்டு இருக்கிறார்கள் என்பதை அறிவார்கள், அவர்கள் தானே நமக்கு வாங்கி தருபவர்கள். எந்த செக்டாரில் அதிகம் நிறுவன பங்களிப்பு இருக்கோ அது மேலே போகும் இதை சில்லரை பங்கு விற்பனையாளர்களும் பயன்ப்படுத்திக்கொண்டால் லாபம் நிச்சயமே.

இந்திய நிறுவன பங்களிப்பு பங்கு சந்தையில் அதிகம் இருந்தாலும், அவர்கள் நினைத்த நேரத்தில் எதுவும் செய்ய முடியாது, ஆனால் யூகத்தின் அடிப்படையில் குறுகியக்காலத்தில் லாபம் சம்பாதித்து வெளியேரும் fii க்கள் நினைத்தால் பங்கு சந்தையை சுருட்டி வீசிவிடுவார்கள் என்பதே கசப்பானா உண்மை.பங்கு சந்தை சரியும் போதெல்லாம் lic, uti, icici போன்ற இந்திய நிறுவனங்களை முதலீடு செயய் வைத்தே நிதி அமைச்சகம் சரிவை தடுக்கிறது, அந்த நிறுவனங்களின் பணம் மக்கள் பணமே , அதை லாபமாக fii க்கள் எடுத்துக்கொண்டு போகிறார்கள், ஆனால் அது யாருக்கு போகுதுனு அந்த fii நடத்துறவங்களுக்கு மட்டும் தான் தெரியும். இப்படி ரகசியம் காத்து செயல்படுவதால் அந்த நிறுவனத்தின் மேனேஜர்கள் பில்லியனில் சம்பளம் வாங்குகிறார்களாம், ரெனைசன்ஸ் டெக்னாலஜிஸ் என்ற fii நிறுவனத்தலைவரின் ஆண்டு சம்பளம் 1.7 பில்லியன் டாலர்கள் என்று பங்கு வணிக பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.

Saturday, August 14, 2010

பங்கு சந்தையும் முகவர்களும்:

ஒருவருக்குப் பங்குகளை வாங்கி விற்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அவர், முகவர்களின் துணையோடு பங்குகளை வாங்கி விற்பது விவேகமான முடிவாக இருக்கும்.

ஆனால், நம்பகமான நல்ல முகவரைத் தேர்வு செய்வது மிக முக்கியம். அவர்களைத் தேர்வு செய்வதற்கு முன் சில அம்சங்களைக் கவனத்தில் கொள்வது நல்லது.

பங்குப் பரிவர்த்தனையில் முகவர்களுக்குரிய சேவைத் தொகை எவ்வளவு என்பதைத் தெரிந்து கொண்டு செயலாற்றுவதன் மூலம் அதிக லாபம் பெற முடியும்.

சில முகவர்கள் நிறைய சேவைத் தொகை (Commission) கேட்பார்கள். இன்னும் சிலர் கொஞ்சம் குறைவாகக் கேட்பார்கள். அதனால் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சிலர் “Discount Brokers” ன்னு இருக்கிறார்கள். இவர்களிடம் சேவைத் தொகை ரொம்பக் குறைவு. இவர்கள் வாங்குவது, விற்பது தவிர வேற ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

ஆனா “Full time Brokers” - முழு நேர முகவர்கள்ன்னு இருக்கிறார்கள். அவர்கள் நமக்காக வாங்குவது விற்பது தவிர, நாம் பங்குகளை சரியான நேரத்தில் வாங்க, விற்க ஆலோசனையும் சொல்வார்கள்.

நீங்கள் இந்த பங்கை இந்த விலையில் வாங்கலாம். இதை இந்த நேரத்தில் இந்த விலையில் வாங்குவதன் மூலம் குறுகிய காலத்தில் அல்லது நீண்ட கால முதலீட்டில் இவ்வளவு இலாபம் எதிர்பார்க்கலாம். அதில் உள்ள அபாயங்கள் என்ன என்பது பற்றியெல்லாம் அவர்கள் தெளிவாக விளக்கமளிப்பார்கள். எனவே முகவர்களைத் தேர்ந்தெடுப்பது பங்கு வர்த்தகத்தில் முக்கியமான அம்சமாகும்.

பங்குச் சந்தை என்பது பணம் கொழிக்கும் வர்த்தகம். நாம் கவனமுடன் அதில் செயல்படும் போது அதிக லாபம் ஈட்ட முடியும். எடுத்த எடுப்பிலேயே நிறைய லாபம் சம்பாதித்து விட வேண்டும் என்று எண்ணாமல், அது பற்றிய முறையான விவரங்களைத் தெரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்வது நம்மிடமுள்ள பணத்தை நாம் பலமடங்கு பெருக்கிக் கொள்ள உதவும்.

எப்போதும் நம்முடைய சேமிப்புகளை ஒரே இடத்தில் குவித்து வைக்காமல் பல்வேறு இடங்களில் பிரித்து வைப்பது விவேகமான முடிவாகும். அண்மையப் பொருளியல் நெருக்கடி பற்றித் தெரிந்ததும் பலர் அத்தகைய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதனால் என்ன பயன்?

பல இடங்களில் முதலீடுகளைப் பிரித்து வைப்பதன் மூலம் நமக்கு ஏற்படக் கூடிய அதிக இழப்புகளைக் குறைக்க முடியும்.

இவ்வாறு முதலீடுகளைப் பிரித்து வைப்பது முதலீட்டுக் கொள்கையின் பொன்னான விதியாகும்.அதாவது ஒரே இடத்தில் ஒரு பொருளையோ, வீட்டையோ, நகையையோ வாங்காமல் பல்வேறு இடங்களில், பல்வேறு தளங்களில் முதலீடுகளைப் பரப்பி வைப்பது. ஏதும் சிக்கலான சூழலில்
ஒன்று விலை குறைந்தாலும் இன்னொன்று அந்த இழப்பைச் சரி செய்யும் வாய்ப்பை நமக்கு ஏற்படுத்தித் தரும்.

அண்மைய காலங்களில் நடுத்தர மக்களிடம் பங்குச் சந்தை அதிக கவனயீர்ப்பைப் பெற்றிருக்கிறது. அதில் முதலீடு செய்வதன் மூலம் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெற முடியும் என்பது அவர்களுடைய ஆர்வத்தின் அடிப்படை ஊற்று. அத்தகைய லாபத்தைப் பெறுவதற்குப் பங்குச் சந்தை பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பங்குச் சந்தை பற்றிப் பலவிதமான புத்தகங்கள் தற்போது தமிழிலேயே கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும்.

அதன் மூலம் பங்குச் சந்தையின் ஆழ, அகலங்களைத் தெரிந்து கொண்டு, பிறகு அங்கு அடியெடுத்து வைப்பதால் நம்முடைய பணத்தை பாதுகாப்புடன் லாபகரமாக  முதலீடு செய்ய முடியும்.

அதை விடுத்து எடுத்த எடுப்பிலேயே நம்மிடம் 50,000 ரூபாய் இருக்கிறது. அதை இரண்டு வருடத்தில் பன்மடங்காக்கி விடலாம் என்ற தப்பெண்ணத்தில் குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல பங்குச் சந்தையில் கால் பதித்தால் நஷ்டம் நமக்குத் தான். இத்தகைய முடிவுக்கும் சூதாட்டத்தில் கலந்து கொள்வதற்கும் வேறுபாடு ஏதும் இல்லை.

பாதுகாப்பான வழிகளில் முதலீடு செய்வதற்குப் பல வழிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நன்மையைத் தரும். மாறாக, நண்பர்கள், உறவினர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சில நேரங்களில்
அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தலாம்.

இன்றைய சூழலில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

முதலாமவர்கள் பங்குச் சந்தையின் நெளிவு, சுளிவுகளைச் சரியாகத் தெரிந்து கொண்டு சரியான நேரத்தில் அதில் முதலீடு செய்பவர்கள். இந்தக் குழுவினர் நூற்றில் பத்துப் பேராகத் தான் இருப்பர்.

மீதமுள்ள 90 பேர் நண்பர்கள் சொன்னார்கள், உறவினர்கள் சொன்னார்கள் என்று கேட்பார் பேச்சைக் கேட்டு முதலீடு செய்பவர்கள். சந்தையில் இழப்பு வரும் போது அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இவர்கள் தான்.

இதற்குக் காரணம், சந்தைச் சூழல் அறிந்தவர்கள் எப்போது வெளியேற வேண்டுமோ அப்போது கச்சிதமாக வெளியேறி விடுவார்கள். ஆனால், இரண்டாம் வகையினர் சந்தையின் போக்கு பற்றி உண்மை நிலையைத் தெரியாததால், அது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அதிக பாதிப்புக்கு
ஆளாகின்றனர்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பற்றிய ஆலோசனைகளை வழங்கும்
முகவர்களில்நம்பகமானவர்களின் ஆலோசனையோடு முதலீடு செய்வது சிறந்தது.

அவர்களுடைய அனுபவமும், உள்ளுணர்வும் இலாபத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதில் துணை நிற்பதோடு பெரும் இழப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

ஆனால் யார் எப்படி என்ன சொன்னாலும்,  நாம் அதை ஓரிரு முறை ஆராய்ந்து அது சரியானதா? அந்த முடிவை எடுக்கலாமா? நம்முடைய மனசாட்சி என்ன சொல்கிறது என்பதை வைத்துத்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்.

ஏனென்றால், பிறருக்கென்று யோசிக்காமல், தனக்கென யோசிக்கும் போது நம்முடைய உள்ளுணர்வு சரியானதை நமக்குச் சொல்லக்கூடும். எனவே, முதலீடு செய்வதற்கு முன் ஒன்றுக்குப் பலமுறை யோசித்து சரியான நேரத்தில் முதலீடு செய்வது நமக்கு வரக்கூடிய இழப்புகளை பெருமளவு குறைக்கும்.

Monday, July 12, 2010

செபி - பங்கு சந்தைகளைக் கண்காணிக்கும் நிறுவனம்.

பொதுமக்கள் முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்காக முகவர்களின் உதவியை நாடினர். அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வர்த்தகம் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டவை தான் இன்று உலகிலுள்ள பங்குச் சந்தைகள்.

பங்குச் சந்தை - அன்றாடம் மில்லியன் கணக்கில் பணம் புழங்கும் இடம். ஆரம்ப காலத்தில் அங்கு நிறையத் தவறுகள் நடந்தன. அதையடுத்து விழித்துக் கொண்ட உலக நாடுகள் பங்குச் சந்தைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளைத் தோற்றுவித்தன.

முகவர்களாலேயே பங்குச் சந்தை நடத்தப்ட்ட போது அதன் நம்பகத் தன்மை பற்றிய கேள்வி எழுந்தது. தவறுகள் நடப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக நெறிமுறைகள் வகுக்கப்பட்டன.

அதனடிப்படையில் ஒவ்வொரு நாடும் தனது பங்குச் சந்தைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளை உருவாக்கின.

பங்குச் சந்தைகளை எப்படி நடத்தலாம் என்ற விதிமுறைகளை வகுத்தது அரசாங்கம். அதன்பிறகு பங்குச் சந்தைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு தனி நிறுவனமும் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டதுதான் செபி - SEBI ( Security and
Exchange Board Of India.) என்ற அமைப்பு. இதன் கண்காணிப்பில்தான் நம் நாட்டின் பங்கு சந்தைகள் இயங்குகின்றன.

இப்படி ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்கமும் தங்கள் வசதிக்கேற்ற அமைப்புகளை உருவாக்கி தங்கள் நாட்டின் சந்தைகளில் தவறுகள் நடக்காத வாறு கண்காணித்து வருகின்றன.

அரசாங்கம் சார்ந்த இந்தக் கண்காணிப்பு அமைப்புகளால் பொதுமக்களுக்கு என்ன பயன்-

பங்கு வர்த்தகத்தின் செயல்பாடுகளை அரசாங்கம் சார்ந்த அமைப்புகள் கண்காணிக்கும் போது அங்கு தவறுகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்ள முடிகிறது. வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றிய அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற நடைமுறை இந்தக் கண்காணிப்பு அமைப்புகள் வந்த பிறகு தான் செயல்வடிவம் பெற்றது.

ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் அவர்களுடைய நிறுவனத்தைப்பற்றி சொல்வது அனைத்தும் எக்ஸ்சேன்ஜில் இருக்கும்.  அவங்களுடைய இணையப் பக்கத்தைத் திறந்து பார்த்தால்
அதில் நிறுவனங்களின்ஆண்டறிக்கையை (Annual Report)  நாம இலவசமாகவே படித்துப் பார்க்க முடியும். அதனால பொதுமக்கள் ஒரு நிறுவனத்தைப் பற்றிய(அந்நிறுவனம் லாபத்தில் நடக்கிறதா அல்லது நஷ்டத்தில் நடக்கிறதா) உண்மை நிலையை நன்கு அறிந்து கொள்ளமுடியும். இதன்மூலம் மக்கள் நம்பிக்கையான நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்ய முடியும்.



பங்கு வர்த்தகம் பற்றிய கண்காணிப்பு அமைப்புகள் தொடங்கப்பட்ட பிறகு அங்கு தவறுகள் நடக்கவே இல்லை என்று சொல்ல முடியாது. அவ்வபோது சிற்சில இடங்களில் தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டனைகளும் கடுமையாக இருக்கின்றன.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வழக்கம் நம்மில் தற்பொழுது அதிகரித்து வருகிறது. எனவே, பங்குசந்தையில் முதலீடு செய்யும்முன்  அது பற்றிய சாதக, பாதகங்ளைப் பற்றிப் புரிந்து வைத்திருப்பது நமக்கு நஷ்டம் வராமல் காக்கும்.

Friday, July 2, 2010

பங்குச் சந்தைகள்:

பங்குச் சந்தைகள்:

பங்கு வர்த்தகம் மிக நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. அண்மைக்கால தொழில் நுட்ப வளர்ச்சி பங்கு வர்த்தகத்தை மேலும் மேம்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்தில் தனித்தனி நிறுவனங்களால் நடத்தப்பட்ட பங்கு வர்த்தகம் தேவையின் பொருட்டு ஒரே இடத்தில் நடத்த வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது. அந்த நிலையில் தொடங்கப்பட்டவை தான் பங்குச் சந்தைகள்.

நல்ல பங்குகள் விற்பனைக்கு வருகிறது. நாம் அவற்றை நம் தேவைக்கேற்ப வாங்கி வைத்திருக்கிறோம்.

சில நாட்களுக்குப் பிறகு அவற்றின் விலை ஏறுகிறது அல்லது நமக்குப் பணத் தேவை வருகிறது.

அதை நாம் விற்கவேண்டும். நாம் வாங்கியது போல் அவற்றை நம்மிடம் இருந்து வாங்க ஒருவர் தேவை. இல்லையென்றால் விற்பனை செய்வது கஷ்டம். அதனால் விற்பவரையும் வாங்குபவரையும் இணைக்கத் தொடங்கப்பட்டதுதான் பங்குச்சந்தை.

தொடக்க காலத்தில், ஒரு நிறுவனத்தின் பங்குகளை எங்கே வாங்குவது? எப்படி வாங்குவது?

அதற்கென முகவர்கள் இருக்கிறார்களா?  தங்கள் முதலீட்டுக்கு என்ன
உத்தரவாதம்?

 இது போன்ற பல்வேறு கேள்விகள் மக்களிடம் எழுந்தன. அதனால் முகவர்களின் தேவை ஏற்பட்டது.

அதாவது வாங்குகிறவங்களுக்கும், விற்பவர்களுக்கும் இடையில் பாலமாக வேலை செய்ய ஆட்கள் தேவைப்பட்டார்கள். அப்பொழுது பாலமாக செயல்பட்டவர்கள்தான் தற்பொழுது பங்கு தரகர்கள் அல்லது முகவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.  அதில் ஒருவருக்கு ஒருவர் தொடர்புகொள்ள ஏற்பட்ட காலதாமதங்களால் எல்லாத் தரகர்களும் சேர்ந்து நாம் ஒரே இடத்தில் வைத்து பரிவர்த்தனை செய்யலாம் என்று முடிவு செய்து ஒரு பொது இடத்துக்கு வந்தார்கள். அது தான் தற்பொழுது பங்குச் சந்தை என அழைக்கப்படுகிறது.

தற்சமயம் உலகம் முழுக்க 70-க்கும் மேற்பட்ட பங்குச் சந்தைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பங்குப் பரிவர்த்தனையைச் செய்வதற்காகத்தான் பங்குச் சந்தையை ஆரம்பித்தார்கள்.

பங்குச் சந்தையை முதலில் ஆரம்பித்தது ஹாலந்து ஆகும்.

Thursday, July 1, 2010

பங்கு என்றால் என்ன?

ஒவ்வொரு நாளும் பங்கு சந்தை பற்றி நம் செவிகளில் விழும் செய்திகள் ஏராளம். 
அவற்றைப் பற்றி நம் மனத்தில் எழும் சந்தேகங்களும் தாரளம். 


BSE., NSE.,Sensex, Nifty, Share,  இவ்வாறு பல அர்த்தம் புரியாத வர்த்தைகளை நாம் செய்திகளில் கேட்டிருக்கலாம். அவை என்ன? எவற்றைக் குறிக்கிறது?  இது போன்ற கேள்விகள் நம் மனதில் எழுவது சகஜம். 


அண்மைய காலத்தில் பங்குச் சந்தை பற்றிய ஆர்வம் பலரிடம் எழுந்திருக்கிறது. 


ஆனால்நம்மில் எத்தனை பேர் பங்கு வர்த்தகம் பற்றி முழுமையாக அறிந்து வைத்திருக்கிறோம்? 


எப்படியாவது இந்தப் பங்குகள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு உண்டு. ஆனால் எங்கு? எப்படித் தெரிந்து கொள்வது.


வாருங்கள்,  உங்களை போன்ற புதியவர்களுக்காகவே இந்த பக்கங்கள் - பங்கு சந்தையைப் பற்றி சுலபமாக நீங்கள் புரிந்து கொள்ள என்னால் ஆன ஒரு சிறிய முயற்சி.


பங்கு வர்த்தகம் - ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய உறுதுணையாக இருக்கும் முக்கியக் காரணி. 


அதன் நுட்பங்களைத் தெரிந்து கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மில்லியன் 
கணக்கில் சம்பாதிக்க இயலும். அது பற்றி முறையாகத் தெரியாமல் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் கையில் உள்ளதையும் இழந்து கடுமையான பாதிப்புகளை அடையநேரும்


ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அகலக்கால் வைக்காமல் சிறிதாகத் தான் தொடங்குவோம். நம்முடைய தயாரிப்புகளுக்கு அல்லது பொருட்களுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு வரும் போது உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படும். நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கு மூலதனம் அவசியம். அதற்காக நாம் 
முதலில் நாடுவது வங்கிகளை. அவர்கள் நம்முடைய வரவு, செலவுகளைப் பார்த்து ஓரளவு கடன் தருவார்கள். அதைத் தாண்டியும் பணத்தேவை ஏற்படும்போது... 


அப்பொழுது நாம் பணத்தை மற்றவர்களிடம் இருந்து வாங்கியாகவேண்டும். அதைக் கடனாக வாங்கினால் அதிக வட்டி கொடுக்க வேண்டிவரும். அதற்குபதிலா நாங்க லாபத்தில் பங்கு கொடுக்கிறோம் என்ற உத்தரவாதம் தந்தால், அதுதான் ஷேர் அல்லது பங்கு. 


நான் லாபத்தில் உங்களுக்குப் பங்கு கொடுக்கிறேன். நீங்களெல்லாம் பங்கு கொடுங்க அப்படின்னு பொதுமக்களிடம் நேராகக் கேட்பது. பொது மக்களிடம் இருந்து பணத்தை வாங்கி அந்தப் பணத்தை வைச்சு நிறுவனத்தை அல்லது வர்த்தகத்தை விரிவு பண்ணி மொத்த லாபம் என்ன வருதோ அதை 
முதலீட்டாளர்களுக்குப் பிரிச்சுக் கொடுக்கிறது தான் பங்கு (SHARE)  எனப்படும்.


ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கோ அல்லது அந்த நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கோ அதிக முதலீடு தேவைப்படலாம். அதற்கான நிதியைத் திரட்டட பொதுமக்களுக்குப் பங்குகள் விற்கப்படுகின்றன. நிறுவனம் ஈட்டும் இலாபம் முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படுகின்றன.


ஆக பங்கு என்றால் என்ன என்பது புரிந்து விட்டது.