உங்கள் அதிர்ஷ்ட நேரம்

Saturday, August 14, 2010

பங்கு சந்தையும் முகவர்களும்:

ஒருவருக்குப் பங்குகளை வாங்கி விற்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அவர், முகவர்களின் துணையோடு பங்குகளை வாங்கி விற்பது விவேகமான முடிவாக இருக்கும்.

ஆனால், நம்பகமான நல்ல முகவரைத் தேர்வு செய்வது மிக முக்கியம். அவர்களைத் தேர்வு செய்வதற்கு முன் சில அம்சங்களைக் கவனத்தில் கொள்வது நல்லது.

பங்குப் பரிவர்த்தனையில் முகவர்களுக்குரிய சேவைத் தொகை எவ்வளவு என்பதைத் தெரிந்து கொண்டு செயலாற்றுவதன் மூலம் அதிக லாபம் பெற முடியும்.

சில முகவர்கள் நிறைய சேவைத் தொகை (Commission) கேட்பார்கள். இன்னும் சிலர் கொஞ்சம் குறைவாகக் கேட்பார்கள். அதனால் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சிலர் “Discount Brokers” ன்னு இருக்கிறார்கள். இவர்களிடம் சேவைத் தொகை ரொம்பக் குறைவு. இவர்கள் வாங்குவது, விற்பது தவிர வேற ஒன்றும் செய்ய மாட்டார்கள்.

ஆனா “Full time Brokers” - முழு நேர முகவர்கள்ன்னு இருக்கிறார்கள். அவர்கள் நமக்காக வாங்குவது விற்பது தவிர, நாம் பங்குகளை சரியான நேரத்தில் வாங்க, விற்க ஆலோசனையும் சொல்வார்கள்.

நீங்கள் இந்த பங்கை இந்த விலையில் வாங்கலாம். இதை இந்த நேரத்தில் இந்த விலையில் வாங்குவதன் மூலம் குறுகிய காலத்தில் அல்லது நீண்ட கால முதலீட்டில் இவ்வளவு இலாபம் எதிர்பார்க்கலாம். அதில் உள்ள அபாயங்கள் என்ன என்பது பற்றியெல்லாம் அவர்கள் தெளிவாக விளக்கமளிப்பார்கள். எனவே முகவர்களைத் தேர்ந்தெடுப்பது பங்கு வர்த்தகத்தில் முக்கியமான அம்சமாகும்.

பங்குச் சந்தை என்பது பணம் கொழிக்கும் வர்த்தகம். நாம் கவனமுடன் அதில் செயல்படும் போது அதிக லாபம் ஈட்ட முடியும். எடுத்த எடுப்பிலேயே நிறைய லாபம் சம்பாதித்து விட வேண்டும் என்று எண்ணாமல், அது பற்றிய முறையான விவரங்களைத் தெரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்வது நம்மிடமுள்ள பணத்தை நாம் பலமடங்கு பெருக்கிக் கொள்ள உதவும்.

எப்போதும் நம்முடைய சேமிப்புகளை ஒரே இடத்தில் குவித்து வைக்காமல் பல்வேறு இடங்களில் பிரித்து வைப்பது விவேகமான முடிவாகும். அண்மையப் பொருளியல் நெருக்கடி பற்றித் தெரிந்ததும் பலர் அத்தகைய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதனால் என்ன பயன்?

பல இடங்களில் முதலீடுகளைப் பிரித்து வைப்பதன் மூலம் நமக்கு ஏற்படக் கூடிய அதிக இழப்புகளைக் குறைக்க முடியும்.

இவ்வாறு முதலீடுகளைப் பிரித்து வைப்பது முதலீட்டுக் கொள்கையின் பொன்னான விதியாகும்.அதாவது ஒரே இடத்தில் ஒரு பொருளையோ, வீட்டையோ, நகையையோ வாங்காமல் பல்வேறு இடங்களில், பல்வேறு தளங்களில் முதலீடுகளைப் பரப்பி வைப்பது. ஏதும் சிக்கலான சூழலில்
ஒன்று விலை குறைந்தாலும் இன்னொன்று அந்த இழப்பைச் சரி செய்யும் வாய்ப்பை நமக்கு ஏற்படுத்தித் தரும்.

அண்மைய காலங்களில் நடுத்தர மக்களிடம் பங்குச் சந்தை அதிக கவனயீர்ப்பைப் பெற்றிருக்கிறது. அதில் முதலீடு செய்வதன் மூலம் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெற முடியும் என்பது அவர்களுடைய ஆர்வத்தின் அடிப்படை ஊற்று. அத்தகைய லாபத்தைப் பெறுவதற்குப் பங்குச் சந்தை பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பங்குச் சந்தை பற்றிப் பலவிதமான புத்தகங்கள் தற்போது தமிழிலேயே கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும்.

அதன் மூலம் பங்குச் சந்தையின் ஆழ, அகலங்களைத் தெரிந்து கொண்டு, பிறகு அங்கு அடியெடுத்து வைப்பதால் நம்முடைய பணத்தை பாதுகாப்புடன் லாபகரமாக  முதலீடு செய்ய முடியும்.

அதை விடுத்து எடுத்த எடுப்பிலேயே நம்மிடம் 50,000 ரூபாய் இருக்கிறது. அதை இரண்டு வருடத்தில் பன்மடங்காக்கி விடலாம் என்ற தப்பெண்ணத்தில் குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல பங்குச் சந்தையில் கால் பதித்தால் நஷ்டம் நமக்குத் தான். இத்தகைய முடிவுக்கும் சூதாட்டத்தில் கலந்து கொள்வதற்கும் வேறுபாடு ஏதும் இல்லை.

பாதுகாப்பான வழிகளில் முதலீடு செய்வதற்குப் பல வழிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நன்மையைத் தரும். மாறாக, நண்பர்கள், உறவினர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சில நேரங்களில்
அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தலாம்.

இன்றைய சூழலில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

முதலாமவர்கள் பங்குச் சந்தையின் நெளிவு, சுளிவுகளைச் சரியாகத் தெரிந்து கொண்டு சரியான நேரத்தில் அதில் முதலீடு செய்பவர்கள். இந்தக் குழுவினர் நூற்றில் பத்துப் பேராகத் தான் இருப்பர்.

மீதமுள்ள 90 பேர் நண்பர்கள் சொன்னார்கள், உறவினர்கள் சொன்னார்கள் என்று கேட்பார் பேச்சைக் கேட்டு முதலீடு செய்பவர்கள். சந்தையில் இழப்பு வரும் போது அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இவர்கள் தான்.

இதற்குக் காரணம், சந்தைச் சூழல் அறிந்தவர்கள் எப்போது வெளியேற வேண்டுமோ அப்போது கச்சிதமாக வெளியேறி விடுவார்கள். ஆனால், இரண்டாம் வகையினர் சந்தையின் போக்கு பற்றி உண்மை நிலையைத் தெரியாததால், அது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அதிக பாதிப்புக்கு
ஆளாகின்றனர்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பற்றிய ஆலோசனைகளை வழங்கும்
முகவர்களில்நம்பகமானவர்களின் ஆலோசனையோடு முதலீடு செய்வது சிறந்தது.

அவர்களுடைய அனுபவமும், உள்ளுணர்வும் இலாபத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதில் துணை நிற்பதோடு பெரும் இழப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

ஆனால் யார் எப்படி என்ன சொன்னாலும்,  நாம் அதை ஓரிரு முறை ஆராய்ந்து அது சரியானதா? அந்த முடிவை எடுக்கலாமா? நம்முடைய மனசாட்சி என்ன சொல்கிறது என்பதை வைத்துத்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்.

ஏனென்றால், பிறருக்கென்று யோசிக்காமல், தனக்கென யோசிக்கும் போது நம்முடைய உள்ளுணர்வு சரியானதை நமக்குச் சொல்லக்கூடும். எனவே, முதலீடு செய்வதற்கு முன் ஒன்றுக்குப் பலமுறை யோசித்து சரியான நேரத்தில் முதலீடு செய்வது நமக்கு வரக்கூடிய இழப்புகளை பெருமளவு குறைக்கும்.